search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசியா மணல்"

    எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலின் பரிசோதனை முடிவு வராததால் மணல் விற்பனை தாமதமாகி உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    இதைத் தொடர்ந்து முதற் கட்டமாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 55 ஆயிரம் டன் மணல் கொண்டுவரப்பட்டது.

    ஒரு யூனிட் மணல் ரூ.9980-க்கு விற்பனை செய்யலாம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மணலை வாங்க நிறைய பேர் முன் வரவில்லை. இதனால் மணல் இன்னும் முழுமையாக விற்பனையாகவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் எண்ணூர் துறைமுகத்துக்கும் மலேசியாசில் இருந்து கப்பலில் மணல் கொண்டுவரப்பட்டது. இந்த மணலை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முன்பதிவு செய்ய முடியாத நிலைதான் காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துள்ள மணலில் சிலிக்கான் கலப்படம் எதுவும் உண்டா? அது ஆற்று மணல்தானா? என்பதை கண்டறிய பரிசோதனை செய்வது வழக்கம். அந்த நடைமுறைக்காக மணல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்ததும் விற்பனை தொடங்கப்படும்.

    அனேகமாக இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவு வந்துவிட்டால் முன்பதிவை தொடங்கி வருகிற 1-ந்தேதியில் இருந்து மணல் விற்பனையை தொடங்கி விடுவார்கள். காலதாமதத்துக்கு இதுதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலுக்கான முன்பதிவு இன்று மாலை முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. #SandImport #EnnorePort
    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகமானதால் மணலுக்கு மாற்றாக எம்.சான்ட் (ஜல்லிக்கற்களின் துகள்) தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எம்.சாண்ட் மணலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்படி மலேசியாவில் இருந்து 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஐ.ஆர்.வி.எஸ். என்ற நிறுவனம் 56,750 டன் மணலை கப்பலில் ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த 23-ந்தேதி வந்தது. இந்த மணல் முழுவதும் இறக்கப்பட்டு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த மணலை வாங்குவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதற்காக TNsand இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒரு யூனிட் (100 கனஅடி) மணல் விலை ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர லாரி வாடகை கொடுக்கப்பட வேண்டும்.

    வெளிப்படைத் தன்மையுடன் மணல் விற்பனை நடைபெற ஆன்லைனில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் இன்று மாலை முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    இறக்குமதி மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடக்க கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறுகையில் “எண்ணூரில் மணல் விற்பனை நடைபெறுவது சென்னையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் சென்னை மற்றும் புறநகரில் மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மலேசியா மணல் இறக்குமதியால் மணல் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.

    விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு யூனிட் மணல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort
    ×